தமிழகத்திலும் "பாண்டி" ஆட டெல்லி முடிவு?.. அடுத்தடுத்து இறக்கப்படும் மத்திய அரசு அதிகாரிகள்!
தமிழகத்தை புதுச்சேரி போல யூனியன் பிரதேசமாக்கி ஆடுபுலி களமாக்க டெல்லி தீவிரமாகி வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தை கிள்ளுக்கீரை போலவும் ஒரு யூனியன் பிரதேசம் போலவும் நினைத்துக் கொண்டு டெல்லி தமது அதிகாரிகளை அடுத்தடுத்து களமிறக்கிக் கொண்டு மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்க வேண்டிய மாநில அரசோ மவுனியாகவே இருந்து வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியாளர்களை திரைமறைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது டெல்லி. டெல்லி நினைத்த அத்தனை திட்டங்களும் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டன.
தமிழக மக்களின் எதிர்ப்பு, தமிழகத்தின் எதிர்காலம் எதனைப் பற்றியும் கிஞ்சித்தும் கவலைப்படமால் தமிழக ஆட்சியாளர்கள் தலைவணங்கி டெல்லியின் உத்தரவுகளை ஏற்றுச் செயல்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் தலையீடு
இந்நியமனத்தைத் தொடர்ந்து தமிழகம், டெல்லியின் நேரடி ஆளுகைக்குட்பட்ட ஒரு யூனியன் பிரதேசமாகிவிட்டது. ஆளுநர் திடீரெ திடீரென நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறார்... அதிகாரிகளை அழைத்து பேசுகிறார்... இது ஒரு மாநிலம்.. சுயாட்சி உரிமைகளை பற்றி பேசிய மண் என்பதை எல்லாம் மறந்து போய் மங்குணிகளாக தலையாட்டி பொம்மைகளாக டெல்லிக்கு அடிமைகளாக தமிழக அமைச்சர்கள் இருந்து வருகின்றனர்.

பிரதமரின் தளபதி
இதன் உச்சமாக பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளின் தளபதிகளில் ஒருவரான ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன், தமிழக அரசின் திட்டத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். பிறகென்ன ஒட்டுமொத்த தமிழக நிர்வாகமும் டெல்லியின் கைகளுக்குப் போய்விட்டது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.

ஆளுநர் செயலர்
இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சக அதிகாரியாக இருந்த ராஜகோபால் இப்போது தமிழக ஆளுநரின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுவிட்டார். இவருக்கு தமிழக அரசின் தலைமை செயலருக்கு இணையான அதிகாரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கோட்டையில் ஒரு தலைமை செயலர்; ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை செயலர் என்கிற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு எந்த நேரத்திலும் கவிழும் அபாயம் இருக்கிறது என கூறப்படுகிறது.

கவிழ்கிறது எடப்பாடி அரசு?
தேர்தல் ஆணையமே தமிழக அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்கியுள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்து டெல்லி அதிகாரிகள் தமிழக நிர்வாகத்தில் திணிக்கப்படுவது என்பது விரைவில் டெல்லியின் முழுமையான ஆட்சி இங்கே ஆளுநர் மூலம் மலரப் போகிறது என்பதையே சுட்டிக்காட்டவே செய்கிறது.












Click it and Unblock the Notifications