தீபாவளிப் பண்டிகை: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, காங். தலைவர் ஞானதேசிகன் வாழ்த்து
சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தமிழக, ஆந்திர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தீபத் திருநாளான தீபாவளியைக் கொண்டாடும் தமிழக, ஆந்திர மக்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக, ஆந்திர மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளித் திருநாள் அறியாமை எனும் பேரிருளை விரட்டட்டும், உன்னத சிந்தனைகளால் நமது உள்ளங்களை ஒளிரச் செய்யட்டும்.
நமது மனங்களில் அன்பு, இரக்கம் விளையச் செய்யட்டும். அதனால் அமைதியும், ஒற்றுமையும் நிலவட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
ஞானதேசிகன் வாழ்த்து
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: "தீபத்திருவிழா என்று வணங்கப்படும் தீபாவளித் திருநாள் நாடெங்கும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. ஆவளி என்றால் வரிசை என்று பொருள்படும்.
எனவே இல்லங்களில் தீபங்களை வரிசையாக அலங்கரித்து வைத்து ஆன்மீக உணர்வோடு ஆண்டுக்கு ஒருநாள் அனைவரையும் குதூகலிக்க வைக்கும் பண்டிகை இது.
ஒரு மதம் சார்ந்த பண்டிகை என்றாலும் எல்லா மதத்தினரும், இனத்தினரும் இணைந்து கொண்டாடும் தீபாவளித் திருநாளில் தீவிரவாதத்தை தீயிட்டு முழுமையாய் ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.