'துப்பும் எச்சிலை துடைச்சுக்குவேன்' புகழ் நாஞ்சில் சம்பத்துக்கு தமிழறிஞர் கோட்டாவில் அரசு வீடாம்!
தினகரனின் துதிபாடி நாஞ்சில் சம்பத்துக்கு தமிழறிஞர் கோட்டாவில் அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்டோரை துதிபாடுகிற நாஞ்சில் சம்பத்துக்கு 'தமிழறிஞர்' கோட்டாவில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு வீடு ஒதுக்கியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுகவில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் திமுகவில் சேரப் போவதாக தகவலை வெளியிட்டு வந்தார். திமுக தரப்பில் இருந்தும் நாஞ்சில் சம்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் அப்போதே திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நாஞ்சில் சம்பத் நிச்சயம் நம் பக்கம் வரமாட்டார்... அவர் எதிர்பார்ப்புகளையெல்லாம் நம்மால் நிறைவேற்ற முடியாது என கூறிவிட்டார். இதையடுத்து திடீரென ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பொறியியல் சீட்
அப்போது சென்னை தனியார் பல்கலைக் கழகம் ஒன்றில் ரூ26 லட்சம் செலவில் நாஞ்சில் சம்பத்தின் மகனுக்கு பொறியியல் படிப்புக்கான இடம் 'ஜாக்பாட்டாக' கிடைத்தது. அத்துடன் நாஞ்சில் சம்பத்துக்கு இன்னோவா காரையும் அதிமுக சார்பில் கொடுத்தார் ஜெயலலிதா.
சசியிடம் சரண்டர்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என பேசிவந்தார் நாஞ்சில் சம்பத். இதைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் நாஞ்சில் சம்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சசிகலாவை நேரில் சந்தித்து, அவரது சாசனத்தை தமிழகம் முழுவதும் பரப்புவேன் என முழங்கினார் சம்பத்.
விடுதி வாடகை செட்டில்
இந்த சந்திப்புக்கு முன்னதாக நாஞ்சில் சம்பத், சென்னையில் தங்கியிருந்த விடுதி வாடகை உள்ளிட்டவை 'ரொக்கமாக' செலுத்தப்பட்டது. சசிகலா சிறைக்குப் போன நிலையில் ஓபிஎஸ் பக்கம் நாஞ்சில் சம்பத் போவார் என கூறப்பட்டது. திடீரென தினகரன் புகழ்பாடத் துவங்கினார் நாஞ்சில் சம்பத்.
காறி துப்பிய மக்கள்
இந்த துதிபாடல்கள் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கடும் எரிச்சலைத்தான் ஏற்படுத்தியிருந்தது. அதுவும் நீதிமன்ற படிகளேறும் டிடிவி தினகரன், காலம் தந்த தலைவன்; திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பவர் என்றெல்லாம் ஓரவாக கூவியதும் தினகரனை புகழ்வதற்காக மக்கள் காறி உமிழ்ந்தால் துடைத்துக் கொள்வேன் என பேட்டியளித்ததும்தான் தாமதம்.. சமூகவலைதளங்களில் நாஞ்சில் சம்பத் இன்றும் நாறடிக்கப்பட்டு வருகிறார்.
அரசு வீடு ஒதுக்கீடு
இப்போது சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 'தமிழறிஞர்' கோட்டாவில் நாஞ்சில் சம்பத்துக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாம். சொந்த 'லாபங்களுக்காக' குற்றவாளிகளைக் கூட துதிபாட தயங்காத நாஞ்சில் சம்பத்துக்கு அதெப்படி 'தமிழறிஞர்' கோட்டாவில் அரசு வீடு ஒதுக்க முடியும்? என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.