வருது... வருது.. மதுவிலக்கு.... மேலும் 1,000 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடல்
சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் மேலும் 1,000 டாஸ்மாக் மதுபான கடைகளை மூட அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற விவகாரம் விஸ்வரூபமெடுத்திருந்தது. தேர்தல் அறிக்கைகளிலும் கட்சிகள் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என உறுதி அளித்திருந்தன.
தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்த முதல்வர் ஜெயலலிதா, முதல் கட்டமாக 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும்; கடைகளின் நேரம் திறப்பு நேரம் குறைக்கப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் 2-வது கட்டமாக 1000 மதுபான கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனால் விரைவில் 2-வது கட்ட மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.