செம்பரம்பாக்கம் ஏரியில் டிச.1-ல் 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டதை தமிழக அரசு மூடி மறைப்பது ஏன்?
சென்னை: தென்சென்னையின் பெரும் வெள்ள பாதிப்புக்கும் பல லட்சம் மக்கள் சில மணிநேரங்களில் அகதிகளாக்கப்பட்டதற்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முறையின்றி அதிக அளவு நீர் திறக்கப்பட்டதுதான் காரணம் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் டிசம்பர் 1-ந் தேதியன்று 20,000 கன அடிநீர் திறக்கப்பட்டதை தமிழக அரசு மூடி மறைத்துள்ளது திடுக்கிட வைத்துள்ளது.
டிசம்பர் 1-ந் தேதி ஆனால் அன்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் சுந்தரவல்லி காலையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இது 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படலாம் என்பதால், அடையாறு ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதன் பின்னர் சில மணிநேரங்களிலேயே இந்த நீர் திறப்பானது அதாவது டிசம்பர் 1-ந் தேதியன்று பிற்பகல் 12 மணியளவிலேயே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 20,000 கன அடிநீர் திறந்துவிடப்படுவதாகவும் அடையாறு ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆக டிசம்பர் 1- ந் தேதியன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கையொப்பமிட்டு வெளியிட்ட செய்திக் குறிப்புகளிலேயே 20,000 கனடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையளத்திலோ (http://www.chennaimetrowater.tn.nic.in/reserve.asp) டிசம்பர் 1-ந் தேதியன்று வெறும் 900 கன அடிநீர்தான் திறக்கப்பட்டதாக பதிவாகி இருக்கிறது.
அப்படியானால் 900 கன அடிநீர் திறந்துவிடப்பட்டதால்தான் தென் சென்னையின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கிப் போனது என்கிறதா அரசு?
உண்மையில் டிசம்பர் 1-ந் தேதி இரவு முதல் விடிய விடிய செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டது எத்தனை ஆயிரம் கன அடி நீர்?

இந்த இரவில் வெளியேற்றப்பட்ட மர்மமான பல்லாயிரம் கன அடி நீர்தான் தென்சென்னை மூழ்கிப் போய் பல லட்சம் மக்கள் சில மணிநேரங்களிலேயே அகதிகளாக நடுத்தெருவில் அலையவிடப்பட்ட கொடுமை நடந்திருக்கிறது.
இந்த இரவோடு இரவாக திறக்கப்பட்ட நீரில் உயிரிழந்தோர் எத்தனை பேர்? அரசிடம் இதுவரை அதிகாரப்பூர்வமான பதில் எதுவுமே இல்லை.

இத்தனைக்கும் அரசின் அதே இணையதளத்தில் டிசம்பர் 2-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரி 3,396 கன அடி அளவு நிரம்பியிருந்தது. ஆனால் வெளியேற்றப்பட்ட நீரின் அளவு 29,000 கன அடி என்கிறது.
அதிகாரப்பூர்வமாக செம்பரம்பாக்கத்தில் இருந்து 29,000 கனடி நீர் திறந்துவிடப்படுவதாக இந்த அறிவிப்பு டிசம்பர் 2-ந் தேதி காலை 11 மணியளவிலேயே ஊடகங்களில் வந்த போதே தென் சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கிப் போய்விட்டன.
இந்த அதிகாரப்பூர்வ நீர் திறப்பு அல்லாமல், அடையாறு ஆற்றுக்கு ஏரி, குளங்கள் மூலம் பெருமளவு நீர் வந்து அடையாறு பொங்கி பிரவாகமெடுத்தது.
சென்னை மாவட்ட ஆட்சியர் டிசம்பர் 1-ந் தேதி காலையிலேயே அடையாறு ஆற்று வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்த போதும் டிசம்பர் 2-ந் தேதி மாலை வரை ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு நடவடிக்கை எதனையுமே அரசு மேற்கொள்ளவில்லை.

டிசம்பர் 1-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி பகல் முழுவதும் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள்.... சென்னை கோட்டூர்புரத்தில் மாடிகளின் மீது ஆயிரக்கணக்கான மக்கள் அபயக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்... அன்று மாலை அங்கு வந்த அமைச்சர் வைத்தியலிங்கம், "மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்" என சுயபுராணம் பாடி, படகுகளை கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை என்கிறார்..
ஒட்டுமொத்தமாக 2 நாட்கள் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போய் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி வேலை செய்த பின்னர் டிசம்பர் 2-ந் தேதி மாலையில்தான் ராணுவத்தினர் களமிறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனால்தான்
டிசம்பர் 1-ந் தேதி காலை தொடங்கி அன்று இரவு முழுவதும் செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்பட்ட மொத்த கன அடி நீர் எவ்வளவு? சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் உள்ளதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன தமிழக அரசுக்கு?

டிசம்பர் 1-ந் தேதியன்று காலையிலேயே வெள்ள அபாய எச்சரிக்கை சென்னை மாவட்ட ஆட்சியரால் விடுவிக்கப்பட்டபோதும் உடனடியாக மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தவோ, மீட்புப் பணிகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையோ எடுக்காமல் அலட்சியம் காட்டியது யார்? எதற்காக இந்த அலட்சியம்?
என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
டிசம்பர் 1-ந் தேதியன்றே தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடும் அதே நேரத்தில் அதிகாரிகள், காவல்துறையினர் வெள்ள அபாயம் குறித்த தகவல்களை போர்க்கால அடிப்படையில் பரிமாறியிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே நடக்காமல் போனதாலேயே தென்சென்னை பேரழிவை சந்தித்தது என்பதே நிதர்சனமான உண்மை.
நன்றி கிராபிக்ஸ்- http://thewire.in/












Click it and Unblock the Notifications