மன்னர் ஜவகர் சஸ்பெண்ட்: ரத்து செய்ய தமிழக அரசு மறுப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹரை இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மன்னர் ஜவஹர் கடந்த நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஓய்வு பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்பு தமிழக அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னர் ஜவஹர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், மன்னர் ஜவஹருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், ஜவஹரை இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.