"வெள்ள நிவாரணம்" வந்தாச்சு.. பணம் எடுக்க ஏடிஎம்களில் குவிந்த மக்கள்!
சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வங்கிகளிலிருந்து எடுக்க ஏடிஎம் மையங்களில் மக்கள் குவிந்ததால் அத்தனை ஏடிஎம் மையங்களும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
தமிழகத்தில் நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை பெரும் மழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும் உலுக்கி விட்டன. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன.

இதையடுத்து வெள்ளத்தில் வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்கியது. மேலும் நிவாரண நிதியும் குடிசைகளை இழந்த மக்களுக்கு நிரந்தர வீடும் கட்டித் தரப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு ரூ.5000 நிவாரண உதவியும், குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தவிர 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி சேலையும் வழங்கப்படுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க கணக்கெடுக்கும் பணி நடத்தி முடிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் நிவாரண உதவி செலுத்தப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி 30 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 14 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.
சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) இன்று காலை முதல் வரத் தொடங்கியது.
இந்தத் தகவல் கிடைக்கப் பெற்ற மக்கள் உடனடியாக ஏடிஎம் மையங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். உடனேயே பணத்தை எடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் பலரும் குவிந்ததால் ஏடிஎம் மையங்களில் கூட்டம் கட்டுக்கடாங்காத நிலைக்குப் போய் விட்டது.
சென்னையில் பல பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காண முடிந்தது.












Click it and Unblock the Notifications