ஷீலா பாலகிருஷ்ணனை தொடர்ந்து மேலும் 2 உயர் அதிகாரிகள் விலக மன்னார்குடி கோஷ்டி உத்தரவு?
ஷீலா பாலகிருஷ்ணனைத் தொடர்ந்து மேலும் 2 உயர் அதிகாரிகளை பதவி விலக மன்னார்குடி கோஷ்டி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணனைத் தொடர்ந்து மேலும் 2 உயர் அதிகாரிகள் பதவி விலக மன்னார்குடி கோஷ்டி நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் உள்ளிட்டோருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஷீலா பாலகிருஷ்ணன் அரசின் ஆலோசகராக, வெங்கட்ரமணன் முதன்மைச் செயலராக இருந்தனர். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வரானபோதும் இவர்கள் பணியில் நீடித்தனர்.
தற்போது அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா முதல்வராவது உறுதி என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணன் தம்முடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் என். வெங்கட்ரமணனும் பதவி விலகக் கூடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் முதல்வரின் செயலராக உள்ள ஏ.ராமலிங்கமும் பதவி விலகுகிறார் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
இவர்கள் அனைவரையுமே மன்னார்குடி கோஷ்டிதான் பதவி விலக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.