பத்தே நாளில் பந்தாடப்பட்ட உளவுத்துறை ஐஜி டேவிட்சன் தேவாசீர்வாதம்
உளவுத்துறை ஐஜியாக பதவியேற்ற 10 நாட்களிலேயே டேவிட்சன் தேவாசீர்வாதம் பந்தாடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உளவுத்துறை ஐஜியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் காவலர் நலவாழ்வுத்துறைக்கு பந்தாடப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக 10 நாட்கள் மட்டுமே டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றிய நிலையில் அவர் திடீரென தூக்கியடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைந்த உடனேயே சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த அதிகாரி ஜெயச்சந்திரன் உளவுத்துறைக்குள் கொண்டுவரப்பட்டார். சசிகலாவுக்கும் முதல்வர் ஓபிஎஸ்-க்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஜெயச்சந்திரன் மாற்றப்பட்டார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம்
பின்னர் கடந்த 13-ந் தேதியன்று உளவுத்துறை ஐஜியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார். அப்போது உளவுத்துறை ஐஜியாக இருந்த கே.என். சத்தியமூர்த்தி விடுப்பில் சென்றார்.

மாற்றம்
இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்து முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார். உடனடியாக ஓபிஎஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத் துறை ஐஜி பொறுப்பில் இருந்து மாற்றி காவலர் நலவாழ்வுத்துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி தயக்கம்
அதே நேரத்தில் விடுப்பில் சென்ற கே.என். சத்தியமூர்த்தியோ மீண்டும் உளவுத்துறை ஐஜி பதவியை ஏற்கும் நிலையில் இல்லை எனவும் கூறப்படுகிறது. மாநில அரசின் மிக முக்கிய பதவியில் ஒரு அதிகாரியை நியமித்துவிட்டே 10 நாட்களிலேயே அவரை டம்மியான இடத்துக்கு மாற்றும் இந்த போக்குக்கு உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அடுத்தடுத்து ராஜினாமா
அண்மையில்தான் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான ஆலோசர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன், ராமலிங்கம் சாந்தா ஷீலா நாயர் அடுத்தடுத்து பதவி விலகினர். தற்போது ஐபிஎஸ் அதிகாரிகளும் அடுத்தடுத்து பந்தாடப்பட்டு வருகின்றனர். இது ஒட்டுமொத்தமாக அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துவிடும் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications