ரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே!
தமிழக மக்கள் விரோதியாகவே பேசுகிறார் ரஜினிகாந்த்.
Recommended Video

சென்னை: அரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமாக முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் மக்கள் விரோத சக்தியாகத்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதை புரிந்து கொள்வாரா?
ரஜினிகாந்தைப் பொறுத்தவரை கொள்கை, கோட்பாடு அரசியல் என்றாலே தலை சுற்றிவிடும் என பதில் சொன்னவர். மக்கள் என்னவோ தம்மை அடுத்த முதல்வராக்கிவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள் என மிதப்பில் இருக்கிறார்.
இந்த எண்ணத்தில்தான் அரசுக்கு ஆதரவாக, முதலாளிகளுக்கு ஆதரவாக, போலீசுக்கு ஆதரவாக மட்டுமே இடைவிடாமல் பேசி வருகிறார். ரஜினிகாந்தின் இந்த அடாவடித்தனமான ஒடுக்குமுறை பேச்சு தமிழகத்துக்கு ஒன்றும் புதிது அல்ல.

பாஜகவின் ஏகடியம்
தமிழகத்தில் பாஜகவினர் அனைவருமே இப்படித்தான் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை கொச்சைப்படுத்துகிறவர்களாக பேசி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பாஜக என்பது வேற்றுகிரக கட்சியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

பாஜகவை போல பேசும் தமிழக அரசு
தமிழக பாஜகவின் குரலைத்தான் தமிழக அரசு தரப்பும் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டங்களில் சமூக விரோதிகள், தேச விரோதிகள் ஊடுருவிவிட்டதாக பாஜக சொன்னதையே தமிழக அரசு மறு பதிப்பு செய்து வருகிறது. இப்போது எரிகிற நெருப்பில் கந்தக அமிலத்தை ஊற்றுகிற நபராக களமிறக்கப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த்,

கந்தக அமிலத்தை ஊற்றும் ரஜினி
பாஜகவினரும் அரசு தரப்பும் பேசிய பேச்சு மொழி, பாடி லாங்வேஜ் என்பது மக்களை எரிச்சல் படுத்துகிறது என்றால் ரஜினியின் பேச்சு கொதிப்பை ஏற்படுத்துகிறது. ரஜினி உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் நெருப்பை கக்குகிறது. அந்த அளவுக்கு மக்களை அவமானப்படுத்தி மக்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.
சுடுகாடாகப் போகுமாம்
மக்கள் போராடவே கூடாது; நீதிமன்றத்துக்கு போகனும்; போராட்டம் நடத்தினால் சுடத்தான் செய்வார்கள், நாடு சுடுகாடாகப் போகும்; ஒவ்வொரு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவுகிறார்கள்; போலீசை அடிச்சது தப்பு என்றெல்லாம் ஏக வசனத்தில் மக்கள் விரோதியாக தன்னை முன்னிறுத்தி பேசுகிறார் ரஜினிகாந்த்.

ரஜினிக்கு காத்திருக்கிறது பாடம்
இத்தகைய மனோநிலை படைத்தவர்கள் மக்கள் விரோத மனிதர்களாகவே பார்க்கப்படுவார்களே தவிர; ஒருநாளும் தலைவராக இருக்க கொஞ்சமும் தகுதியுடன் கூடியவர்களாக கருதப்பட மாட்டார்கள். மகத்தான போராட்டங்களின் மூலம் சமூக மாற்றங்களை சாதித்த தமிழர்களின் மண்ணில் நின்று சாபடுமிடும் ரஜினிகாந்தத் யார்.. அவருக்கு தமிழகம் சரியான பாடத்தைத் தரும்.. இவர் இப்படியே தொடர்ந்து பேசினால்..












Click it and Unblock the Notifications