இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா.. ராஜேந்திர பாலாஜி திடீர் கொந்தளிப்பு
யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video

மதுரை : யார் வேண்டுமானாலும் கடவுள்களை பற்றி அவதூறு சொல்ல இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தவறான கருத்துகள் இடம்பெற்று இருப்பதாக, இந்து அமைப்புகள் வைரமுத்துவிற்கு எதிராக போராடி வருகின்றன. இந்த பிரச்னை தற்போது பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.

இந்த பிரச்னையில் வைரமுத்துவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த படைப்பாளிகளும் களமிறங்கி உள்ளதால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வைரமுத்து சர்ச்சை குறித்தும், கமலஹாசனின் அரசியல் அறிவிப்பு குறித்தும் கருத்து தெரிவித்து உள்ளார்.
கமலஹாசன் குறித்தான கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் அரசியலில் ஈடுபடுவதும், கட்சி ஆரம்பிப்பதும் யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அதை திறம்பட நடத்துவது தான் சிரமமான காரியம். இதை விரைவில் கமலஹாசன் புரிந்து கொள்வார்.
கட்சி தொடங்குவது என்றால் கிளை அமைப்பு, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநகரம் வாரியாக கிளைகள் அமைக்க வேண்டும். இதை ஒழுங்குப்படுத்தவே 10 ஆண்டுகள் தேவைப்படும். இதை எல்லாம் கமலஹாசன் முதலில் செய்து முடிக்கட்டும். பிறகு அவர் வெற்றி பெறுவாரா இல்லையா என்பது குறித்து பேசலாம்.
நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் இப்போது கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது காலதாமதமான அறிவிப்பாகும். அ.தி.மு.க. மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. இந்த அரசை முழுமையாக ஆதரிக்கிறார்கள். எனவே அ.தி.மு.க.வுக்கு எபோதும் எந்த பாதிப்பும் இல்லை.
புதிதாக கட்சி தொடங்குவது தீபாவளி ரிலீஸ் படம் போல ஒரு மாதம் மட்டுமே ஓடக் கூடிய சினிமா போன்றது. ஆனால் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் போன்றது. எத்தனை பிரிண்டுகள் போட்டாலும் 40, 50 ஆண்டுகள் தொடர்ந்து ஓடும் என்று குறிப்பிட்டார்.
வைரமுத்து குறித்த கேள்விக்கு, ஆண்டாள் என்பவர் தமிழ்க் கடவுள். அவரை கோடிக்கணக்கானோர் வழிபட்டு வருகிறார்கள். எந்த மதத்தையும் புண்படுத்தும் வகையில் கருத்து சொல்வது தவறு. மற்ற மதத்துக்கு எதிராக கருத்து எதுவும் சொல்லாமல் கவிஞர் வைரமுத்து இந்து மதத்துக்கு எதிராக பேசியது தவறாகும்.
யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லி, இழிவுபடுத்த இந்து மதம் என்ன கிள்ளுக்கீரையா? கவிஞர் வைரமுத்து எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை. அவர் வருத்தம் தெரிவித்து விட்டதால் இந்த பிரச்சனையை விட்டு விடலாம் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications