டிரைவர் வேலைக்கு லஞ்சம் வாங்கிய அமைச்சரின் பி.ஏ., ... வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஆடியோ
சென்னை: தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியாளர், அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கியது அம்பலமாகியுள்ளது. பணம் கொடுத்த போலீஸ்காரருடன் அமைச்சரின் பிஏ பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு? அதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் வேலைக்கு அமைச்சரின் உதவியாளர் பணம் வாங்கியதாக போலீஸ்காரருடன் அவர் பேசும் ஆடியோதான் அது. வாட்ஸ்அப் ஆடியோ பேச்சு விவரம்: எடுத்தவுடன் ரிங் போகும் சத்தம் கேட்கிறது.

காவலர்: ஹலோ வணக்கம்சார், நான் கச்சிரயபாளையம் போலீஸ் பேசறேன் சார்.
மினிஸ்டர் பிஏ: யாரது சொல்லுங்க.
காவலர்: அருண் என்பவருக்கு ராஜா பணம் கொடுத்தானே, என்ன ஆச்சு.
பிஏ: சிறிதுநேரம் யோசித்தபடி, ஓ அதுவா.
காவலர்: போக்குவரத்து கழக டிரைவர் பணம் கொடுத்திருந்தானே சார்.
பிஏ: 15ம் தேதிக்குள் ரெடியாகும்.
காவலர்: 15ம் தேதிதான் ரெடியாகுமா?
பிஏ: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
காவலர்: காசு கொடுத்து 3 மாசம் ஆயிருச்சே... அதனாலதான் கேட்கிறேன். காசு கொடுத்தவன் என்ன கேட்கிறான். அதனாலதான் சார். ராஜாகிட்ட கேட்டா பதில் சொல்ல மாட்டுக்கான்.
பிஏ: மினிஸ்டர் டேபிளில் பைல் உள்ளது. 113 கையெழுத்து போட வேண்டும். கையெழுத்துதான் பாக்கி.
காவலர்: பணம் ராஜா கொடுத்துவிட்டானா
பிஏ: பணம் வந்துவிட்டது.
காவலர்: இதுவரை எவ்வளவு கொடுத்துள்ளான்.
பிஏ: என்கிட்ட 5 பேருக்கு கொடுத்து உள்ளான்.
காவலர்: அப்படியா சார்.
பிஏ: 5 பேருக்கு ரூ.9 லட்சம் கொடுத்து உள்ளான்.
காவலர்: 5 பேருக்கா சார்.
பிஏ: ஆமா 5 பேருக்கு.
காவலர்: இந்த மாதத்திற்குள் முடிந்து விடுமா.
பிஏ: கையெழுத்து போட்டா, நாளைக்கே முடிந்துவிடும். இதுவேற வந்துட்டு. உங்களுக்கு தெரியாதா, இப்ப என்ன நடக்குன்னு.
காவலர்: ஆமாங்க சார்.
பிஏ: என்ன ஆமாங்கிறீங்கே.
காவலர்: இல்லை நீங்க சொன்னீங்களே அதுக்குதான்
பிஏ: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எல்லோரும் பிசியா இருக்காங்க.
காவலர்: சீக்கிரம் முடிஞ்சிருமா.
பிஏ: இன்று கையெழுத்து போட்டால் நாளைக்கே முடிந்து விடும். பணம் வந்துவிட்டது.
காவலர்: சரிங்க சார். ஓகே. பணம் வந்துட்டுல்ல சார்.
பிஏ: நமக்கே அமொண்ட் வரணும். முடிச்சிட்டு சொல்றேன்.
காவலர்: அவனே கஷ்டத்தில் இருக்கிறான். நான் வாங்கி ஏதோ எடுத்து கொண்டதாக ஊரில் ஒரு மாதிரியாக நினைக்கிறார்கள்.
பிஏ: என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்.
காவலர்: ராஜா தான் கொடுத்தான். எனக்கு திருக்கோவிலூர்தான். சந்தோஷ், சபரீசன் (இளைஞர் பாசறை) எனது கிளாஸ்மேட்தான். ராஜா இங்கு சரியில்லாத வேலை செய்கிறான்.
பிஏ: யாரு.
காவலர்: ராஜாதான் சார். நேற்று கூட இன்ஸ்பெக்டர் சொல்றார். பழகியவன் என்பதால் விடுகிறேன், என்று சொன்னார்.
பிஏ: போனில் டீலிங் செய்ய வேண்டாம். இதுவீட்டு நம்பர். நேரில் பேசலாம். சென்னைக்கு வாங்க பேசலாம்.
காவலர்: நேற்றிவு ஊருக்கு வந்துவிட்டதாக ராஜா கூறினான்.
பிஏ: வந்துவிட்டு கிளம்பிவிட்டேன். உங்க பேரு
காவலர்: மகேஷ்.
பிஏ: நேம் லிஸ்ட் கவர்ல போட்டு கொடுத்து உள்ளான். 76 கையெழுத்து போட்டாக வேண்டும்.
காவலர்: ஓகே, ஓகே. கொஞ்சம் முன்கூட்டியே வாங்கி கொடுத்தா நல்லா இருக்கும்.
பிஏ: மொத்தமாக அமொண்ட் கொடுத்து இருக்கான். பெரிய தெய்வத்தை கவனித்து விட்டனர். குட்டி தெய்வத்தை கவனிக்க வேண்டாமா.
காவலர்: என்ன அமொண்ட் சொல்லுங்க.
பிஏ: கவனிச்சா நல்லாயிருக்கும்.
காவலர்: இந்த நம்பருக்கு ஆர்டர் ரெடியாயிட்டுன்னு சொல்லுங்க, நானே சென்னைக்கு வாரேன். இல்லை தம்பிய அனுப்புகிறேன்.
பிஏ: ராஜாகிட்ட எவ்வளவு கொடுத்தீங்க.
காவலர்: ரூ.1.80 லட்சம் கொடுத்து இருக்கேன்.
பிஏ: எங்கிட்ட ரூ.9 லட்சத்து சில்லரை கொடுத்து உள்ளான். மொத்தமாக கொடுத்திருக்கிறான்.
காவலர்: சரிங்க சார்.
பிஏ: இந்த பையனுக்கு 6 பேர் கணக்குனு மினிஸ்டர் சொல்லியிருக்கார்.
காவலர்: வணக்கம் சார் என உரையாடல் முடிகிறது.
இந்த வாட்ஸ்அப் ஆடியோ குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்ட போது, ஆடியோவில் பெயர் கூறப்பட்ட காவலரை விசாரணைக்கு எஸ்பி நரேந்திரன்நாயர் அழைத்துள்ளார். விசாரணைக்கு பிறகே உண்மை தெரிய வரும்'' என்றனர்.
அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் பணிக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக அவரது பிஏ, காவலருடன் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போக்குவரத்துக்கழக அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்த போது டிரைவர், பொறியாளர் பணிக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்பட்டது. இப்போது வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சரின் பிஏ லஞ்சம் வாங்கியதாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications