தனிவார்டுக்கு மாற்றினதா சொன்னாங்க.. அம்மாவை பார்க்க முடியலையே... அதிருப்தியில் அமைச்சர்கள்
அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அமைச்சர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா தனிவார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் நிலையிலும் அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லையே என்ற அதிருப்தியில் இருக்கிறார்களாம் தமிழக அமைச்சர்கள்.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் முடிந்த கையோடு தமிழக அமைச்சர்கள் அனைவரும் சென்னை திரும்பினர். உடல் நலம் தேறியுள்ள முதல்வர் ஜெயலலிதா தனி வார்டுக்கு 19-ந்தேதி மாற்றப்பட்டுவிட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை திரும்பினர் அமைச்சர்கள்.
அப்பல்லோவில் அமைச்சர்கள்
இதையடுத்து நேற்று அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கலாம் என சென்றனர் அமைச்சர்கள். ஆனால் வழக்கம் போல அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
சிலருக்கு மட்டும் கட்டளை
ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்களை மட்டும் அப்பல்லோவுக்குள் இருக்க சொல்லிவிட்டு மற்றவர்களை கிளம்பிச் சொல்லியிருக்கிறார் சசிகலா நடராஜன். இப்போதும் கூட சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்த முடியாமல் மருத்துவமனையைவிட்டு அவர்கள் வெளியேறினர்.
கையெழுத்து
இன்னும் சொல்லப் போனால் அமைச்சர்களை சசிகலா நடராஜன் கூட சந்தித்து பேசவில்லையாம். மருத்துவமனைக்குள் இருந்த அமைச்சர்களிடம் வாக்குப் பதிவு குறித்து விசாரணை நடைபெற்றதுடன் முக்கிய கோப்புகளில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளார் சசிகலா.
உண்மைதானா?
அவர்களும் கூட அம்மாவை பார்த்துவிடலாம் என்றுதான் நினைத்தார்களாம்...ஆனால் முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட மட்டுமே தம்மை காக்க வைத்தார்கள் என்பதை லேட்டாகத்தான் உணர்ந்தனராம். அப்போது அங்கிருந்த ஒரு மூத்த அமைச்சர் மற்றொரு சகாவிடம், இவங்க நடந்துக்கிறதைப் பார்த்த அம்மாவை தனிவார்டுக்கு மாத்துன அறிகுறியே தெரியலையே என்றாராம்..