சென்னை-பெங்களூர் தொழில் காரிடார் வழித்தடத்தில் ஆந்திரா துறைமுகமா?: தமிழகம் எதிர்ப்பு
சென்னை: பொருளாதார முன்னேற்றத்துக்கான சென்னை-பெங்களூர் தொழிற்சாலை மேம்பாட்டு வழித்தடத்தில் ஆந்திராவின் கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தை இணைக்க தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த சென்னை-பெங்களூர் இடையே தொழிற்சாலைகள் மேம்பாட்டு வழித்தடத்தை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12 ஆயிரம் கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இங்கு அமையும் தொழிற்சாலைகள் மூலம் தென்மாநிலங்களில் அடுத்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். அந்த தொழிற்சாலைகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படும்.
இந்த திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டம் சென்னையில், பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் சி.வி.சங்கர் பங்கேற்றார்.
இதுபோல், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களின் அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர். இத்திட்டத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தையும் இணைக்க தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இருக்கும் நிலையில் ஆந்திரா துறைமுகங்களை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் ஆந்திரா அதிகாரிகளோ, தமிழக துறைமுகங்களில் ஏற்கெனவே நெருக்கடி அதிகமாக இருக்கிறது. கிருஷ்ணபட்டினம் துறைமுகத்தையும் இணைத்துக் கொண்டால் நெருக்கடி குறையும் என்கிறது.












Click it and Unblock the Notifications