முல்லைப் பெரியாறு அணையில் ஷட்டரை இறக்க தமிழகம் தீவிரம்.. 'கிரீஸ்' போடுகிறார்கள்!
தேனி: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தமிழகம் தண்ணீர தேக்கி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கு வசதியாக ஷட்டரை இறக்கும் பணிகளைத் தொடங்கி தமிழகம் தயாராகி வருகிறது. இதற்கு முன்பாக தற்போது சில மராமத்துப் பணிகளை அது தொடங்கியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில், ஷட்டரை 136 அடிக்கு இறக்கி 142 அடி வரை தண்ணீரை தேக்கி சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் தற்போது இறங்கியுள்ளனர்.
ஷட்டரை இறக்குவதற்கு முன்பு சில மராமத்துப் பணிகளை அவர்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். வழக்கமாக இதுபோன்ற பணிகளில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டால் அணையின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள போலீஸார் தடுத்து இடையூறு செய்வார்கள். சண்டைக்கு வருவார்கள். ஆனால் தற்போது சுபரீம் கோர்ட் கடும் சூடு போட்டுள்ளதால் தமிழக அதிகாரிகளின் பணிகளில் கேரள போலீஸார் தலையிடாமல் அமைதியாக உள்ளனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் தற்போது வந்து உள்ள தீர்ப்பையடுத்து 2 நாட்களாக பொதுப் பணித்துறை ஊழியர்கள் அணைக்கு சென்று ஷட்டரை இறக்கி ஏற்ற வசதியாக கிரீஸ், எண்ணை ஆகியவற்றை தடவி உள்ளனர். மேலும் ஷட்டரை ஒட்டி இருக்கும் செடிகள் புற்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு கேரள மாநில போலீசார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை ஷட்டரை கீழே இறங்கும் நேரத்தில் அவர்களது நிலை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
தற்போது அணையில் 114 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. அதனால் ஷட்டரை உடனே இறக்குவதற்கான அவசியம் இல்லை. தேவைப்படும் போது ஷட்டரை இறக்குவதற்கு அரசிடம் இருந்து உத்தரவு பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.