வெட்கம்கெட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை எங்கு பார்த்தாலும் விடாதீங்க.. கட்ஜு அதிரடி
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி மூலம் நாட்டையை ஆச்சரியப்பட வைத்த தமிழர்களே, இந்த போராட்டத்தையும் இப்போது செய்யுங்கள். உங்களது தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுக்கு எதிராக அமைதியான முறையில் கருப்புக் கொடி காட்டுங்கள். எங்கு பார்த்தாலும் போராட்டம் நடத்துங்கள் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் போட்டுள்ள முகநூல் பதிவு:
தமிழர்களே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்மூலமாக ஒட்டுமொத்த நாட்டையும் வியக்க வைத்து விட்டீர்கள். நீங்கள் ஹீரோக்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது தமிழ்நாடும், ஒட்டுமொத்த தேசமும், இன்னொரு ஹீரோயிசத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றன.
பெங்களூர் சிறையிலிருந்துபடி ஆட்சியைக் கட்டுப்படுத்தும் குற்றவாளி, சிறைப் பறைவையின் பொம்மை ஆட்சிக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் வெட்கம் கெட்ட எம்.எல்.ஏக்களுக்கு எதிராக நீங்கள் சட்டபூர்வமாக, அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும்.
அவர்களது வீடுகள், அலுவலகங்களுக்கு வெளியே நின்று போராடுங்கள், எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இந்த எம்.எல்.ஏக்கள் எங்கு போனாலும் விடாதீர்கள். அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டுங்கள். அவர்களை எந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடாதீர்கள். சமூக ரீதியாக அவர்களைப் புறக்கணியுங்கள். எல்லாவற்றையும் சட்டப்பூர்வமாக செய்யுங்கள்.
தமிழ் மக்களின் வீரத்தை அவர்கள் உணர வேண்டும். அவர்கள் மாபெரும் மன்னர் ராஜராஜ சோழனின் வழி வந்தவர்கள் என்பதை இந்த எம்.எல்.ஏக்கள் உணரும்படி செய்ய வேண்டும் என்று கட்ஜு கூறியுள்ளார்.