பிடிவாதமாக இருந்த கர்நாடகாவிற்கே சாதகமான தீர்ப்பு... ஓபிஎஸ், ஈபிஎஸ் 'கப்சிப்'!
காவிரி தீர்ப்பால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் தீர்ப்பு நகலை பார்த்துவிட்டு தான் கருத்து சொல்ல முடியும் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மவுனம் காப்பது சரியா?
Recommended Video
சென்னை : காவிரி தீர்ப்பால் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் தீர்ப்பு நகலை முழுவதும் படிக்காமல் கருத்து சொல்ல முடியாது என்று பொறுப்பை தட்டிக் கழிப்பது தமிழக முதல்வர் பழனிசாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வகிக்கும் பொறுப்புகளுக்கு அழகானதா? கர்நாடக முதல்வர் சித்தராமையா மட்டும் எப்படி தீர்ப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் உரிமையான 192 டிஎம்சி நீரை வழங்க வைக்க கர்நாடகாவை வற்புறுத்தி வந்த அரசு கடைசியாக இருக்கும் பங்கில் 14.75 டிஎம்சியை கோட்டை விட்டு நிற்கிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தண்ணீர் வழங்க மட்டும் மறுப்பு தெரிவித்து வந்த கர்நாடகா இன்றைய தீர்ப்பை கொண்டாடி வருகிறது.
தமிழகம் இத்தனை ஆண்டுகள் காவிரி நீருக்காக சட்டப்போராட்டங்களை நடத்தி காத்திருந்தது. ஆனால் தரவே முடியாது முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று விடாப்படியாக இருந்த கர்நாடகாவிற்கே இன்றைய தீர்ப்பு சாதகமாகியுள்ளது. இத்தனை ஆண்டுகள் தமிழகம் நடத்திய சட்டப்போராட்டம் இது தானா.
கவனம் செலுத்தாத அரசு
காவிரி நீர் விவகாரத்தில் அரசு வழக்கு போட்டதே தவிர அதில் முழுக்கவனம் செலுத்தவில்லை என்பது விவசாய சங்கங்களின் குற்றச்சாட்டு. கர்நாடக முதல்வர் சித்தராமையா பாலி நாரிமனை டெல்லியில் நேரில் சந்தித்து காவிரி நீர்தங்களுக்கே ஏன் கிடைக்க வேண்டும் என்று விளக்கினார்.
செய்தாரா பொதுப்பணித்துறை அமைச்சர்?
ஆனால் பொதுப்பணித்துறையை தனது வசம் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி அதை செய்தாரா?ஓராண்டில் எத்தனை முறை காவிரி நீர் வழக்கில் வாதாடும் வழக்கறிஞர்களை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்திருக்கின்றனர். இன்றும் கூட தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களில் தீர்ப்பை வரவேற்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சித்தராமையா.
இப்படி பொறுப்பை தட்டிக் கழிக்கலாமா?
ஆனால் தீர்ப்பு நகல் முழுவதும் கிடைக்கவில்லை, தீர்ப்பு நகல் கிடைத்ததும் அரசு அது குறித்த கருத்தை தெரிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலாக ஒரு பதிலை கூறி இருக்கிறார். முதல்வரும், துணை முதல்வரும் இது குறித்து வாய்திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.
வழக்கறிஞர்களிடம் கேட்டிருக்கலாமே
தீர்ப்பு குறித்து முழுவதும் தெரிந்து கொண்டு தான் கருத்து சொல்வேன் என்று அரசு சொல்வது புத்திசாலித் தனமான பதிலாக இருக்கலாம். ஆனால் காலை 10.30 மணியளவில் வந்த தீர்ப்பின் அம்சங்கள் என்னவென்று வழக்கில் ஆஜராகி வாதாடி வந்தவர்களை தொடர்பு கொண்டு கேட்டு கூட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அரசு சொல்ல முடியாத நிலையிலா இருக்கிறது.
இது தான் அரசின் மெனக்கெடலா?
இந்த குறைந்தபட்ச மெனக்கெடல் கூட அரசு செய்யத் தவறியது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். அப்படியானால் இதே போன்று தான் வழக்கின் போக்கிலும் அரசு அக்கறை காட்டியதா என்றும் விவசாயிகள் வினவுகின்றனர். முதல்வர், துணை முதல்வரின் மவுனம் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.