தமிழக- கர்நாடக வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய 'ஜூனியர்' வீரப்பன் சிக்கினான்!
கொளத்தூர்: தமிழகம்- கர்நாடகா வனப்பகுதியில் 6 யானைகளைக் கொன்று தந்தங்களை கடத்தி விற்பனை செய்து வந்த ஜூனியர் வீரப்பன் என்றழைக்கப்படும் சரவணன் கவுண்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகம்- கர்நாடகா வனப்பகுதியில் தந்தங்களுக்கு யானைகளைக் கடத்துதல், சந்தன மரங்களை வெட்டிக் கடத்துதல் ஆகியவற்றை செய்து வந்தான் வீரப்பன். அவன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் சத்தியமங்கலம் வனப்பகுதி சிறிது காலம் அமைதியாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக- கர்நாடகா வனப்பகுதியில் யானைகள் கொல்லப்பட்டு தந்தங்கள் கடத்தப்படுவது அதிகரித்தது. இந்த கடத்தலில் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் கவுண்டர் என்பவர் ஜூனியர் வீரப்பனாக உருவெடுத்திருப்பதாக கூறப்பட்டது.
இவர் தனது கூட்டளிகள் 20 பேருடன் 6 ஆண் யானைகளை கொன்றதாக கர்நாடக வனத்துறையினர் வழக்குப் பதிவும் செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் மாதேஸ்வர வன உயிரியல காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானையை வேட்டையாடுவதாக ஜூனியன் வீரப்பன் கும்பல் வந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தி தமிழக வனப்பகுதிக்கு தப்பி வந்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படையினர் ஜூனியர் வீரப்பனைத் தேடி தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். .இந் நிலையில் சரவணன் அவரது வீட்டில் தங்கிருந்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி பாக்யராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சரவணை விசாரணைக்காக தங்களிடம் ஒப்படைக்கவேண்டி கர்நாடக வனதுறையினர் மேட்டூரில் முகாமிட்டுள்ளனர்.