ஒரு பக்கம் அக்னி வெயில்.. மறுபக்கம் தலைவர்களின் அனல் பிரசாரம்.. மக்கள் தீர்ப்பு எப்படி இருக்குமோ?
சென்னை: அக்னி கொதிக்க... அனல் காற்று வீச அரசியல் களத்திலும் அனல் தகிக்க ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சியின் சாதனைப் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா ஒருபக்கம் வாசிக்க... 5 வருஷம் என்னத்த செஞ்சி கிழிச்சீங்க என்று திமுகவின் ஸ்டாலின் மற்றொரு பக்கம் கேட்க... இவர்கள் இருவர் செய்த ஊழல்களையும் தோரணம் கட்சி தொங்க விடுகிறார் தேமுதிகவின் விஜயகாந்த்.
ஊரில் திருவிழா என்றால் களைகட்டும்... அதுவும் தேர்தல் திருவிழா என்றால் கேட்கவா வேண்டும்? ஊர் ஊருக்கு பிரச்சார பாடல்கள் களை கட்டுகின்றன. வேட்பாளரை அறிவித்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்ப தயாரானால் நாட்டாமை தீர்ப்ப மாத்து என்று கூறி உருவ பொம்மைகளை எரிப்பதோடு வேட்பாளர்களையை அடித்து உதைக்கிறார்கள் திமுகவில். இதனால் சீரியலில் ஆளை மாற்றுவது போல இவருக்கு பதில் இவர் என்று ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் அறிவிக்க வேண்டியிருக்கிறது.
ஆளும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சார வேனில் வந்து எதிர்கட்சியினரை வசைபாடிவிட்டு செல்கின்றனர். தேர்தல் முடியிற வரைக்கும் கையில காசுக்குப் பஞ்சமிருக்காது என்பதால் உற்சாகமாக வேடிக்கைப்பார்க்கின்றனர் திருவாளர் வாக்காளர்கள்.

களை கட்டும் பிரச்சாரம்
சென்னை தீவுத்திடலில் தொடங்கி விருத்தாச்சலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம் என 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்து விட்டார் ஜெயலலிதா. அதேபோல ஸ்டாலினும் சென்னையில் தொடங்கி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சி என சுற்றி வருகிறார்.

பஞ்ச் வசனங்கள்
மக்கள் நலக்கூட்டணி தேமுதிக தலைவர்களும் தங்கள் பங்குக்கு பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இவர்களின் பிரச்சாரத்தில் அதிகம் அனல் பறப்பது பிரேமலதா, விஜயகாந்த் கூட்டங்களில்தான். பிரச்சாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஸ்டைல் இருக்கிறது... ஒரு பஞ்ச் இருக்கிறது. அதை மிஸ் செய்தவர்களுக்காகவே நாங்கள் தொகுத்து தருகிறோம்.

சாதனைப் பட்டியல்
ஆளும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒவ்வொரு முறையும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பஞ்ச் வைப்பார். எதிர்கட்சியாக இருக்கும் போது அவரது பிரச்சார பாணி வேறு விதமாக இருக்கும். இம்முறை ஆளுங்கட்சி என்பதால் சாதனைகளை அடுக்குகிறார். அது கேட்பவர்களுக்கு போர் அடிக்கத்தான் செய்கிறது.

தாய், அன்பு சகோதரி
மக்களுக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்று ஒரு தாய்க்குத்தான் தெரியும் என்று கூறும் ஜெயலலிதா, உங்கள் அன்பு சகோதரியின் நல்லாட்சி தொடர வாக்களியுங்கள் என்று கேட்கிறார்.

வசந்தம் வீசும்
வசந்தம் வீசும் உண்மை எப்படி நம்பிக்கையைக் கொடுக்கிறதோ அதுபோல எனது ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த வசந்தம் தொடர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிக்கிறார் ஜெயலலிதா.

சூப்பர் ஹீரோ
பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஹீரோ என்று கூறத்தவறுவதில்லை. ஆளும் அதிமுக அரசு பற்றி குற்றம் சாட்டும் ஸ்டாலின், 5 வருஷமா எதையாவது செஞ்சி கிழிச்சீங்களா என்று கேட்கிறார்.

காலில் விழுகிறேன்
எனக்கு எந்த பதவியும் வேண்டாம்... நான் உங்கள் காலில் விழுகிறேன்... சத்தியமாக ஓட்டு போடுவீங்களா என்று ஸ்டாலின் கேட்பது இம்முறை கொஞ்சம் புதுசுதான்.

அண்டப்புளுகு ஆகாசப் புளுகு
அதிமுக ஆட்சியைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று ஜெயலலிதா சொல்ல...அதற்கு ஸ்டாலினோ, அண்டப்புளுகு ஆகாசப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் ஜெயலலிதா என்று கூறி வருகிறார்.

விஜயகாந்த் அட்டாக்
தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் கலந்து கட்டி அடிக்கிறார் விஜயகாந்த். பேசுவது புரியவில்லை என்று கூறியவர்களுக்கு, பழைய பன்னீர் செல்வமாக வந்து பதிலடி கொடுத்து வருகிறார். அறிவாலயத்தில் மட்டுமே ஸ்டாலின் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது விஜயகாந்தின் பஞ்ச்.

கொள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம்
இது ஒரு தர்மயுத்தம் என்று சொல்லும் விஜயகாந்த், வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கியது போல இந்த கொள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கவேண்டும் என்பதும் அவரது பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது.

மாற்றத்தைத் தருவோம்
அதிமுகவோ, திமுகவோ வேண்டாம் நாங்கள்தான் மாற்றத்தைத் தருவோம் என்று கூறி பிரச்சாரம் செய்து வரும் அன்புமணி ராமதாஸ், நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது போதும், படித்த மருத்துவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று பஞ்ச் வைக்கிறார்.

ஆடலும் பாடலும்
நீங்க பிரச்சாரம் பண்ணுங்க பண்ணாம போங்க... பிரியாணி குடுங்க குடுக்காம போங்க... எங்களுக்கு ஆடலும் பாடலும் போட்டே ஆகணும் என்பது வாக்காளர்களின் கோரிக்கையாக இருப்பதால் பிரச்சார மேடைகளில் எம்.ஜி.ஆரும், விஜயகாந்தும் அவ்வப்போது வந்து நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது.

வாக்காளர்களின் தீர்ப்பு
மக்களின் கைவிரல் எந்த பொத்தானை அழுத்துமோ?. யார் முதல்வர் நாற்காலியில் அமருவார்களோ?. மே 19ல் வசந்தம் மலருமா? முடியுமா? கூட்டணி ஆட்சி மலருமா? மாற்றம் வருமா? மக்களின் தீர்ப்பிலும் வாக்காளர்களின் கைகளில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications