குமரிக்கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி: தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்- ரமணன்
சென்னை: குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. முதலில் விட்டு, விட்டு பெய்த மழை நவம்பர் மாதம் மற்றும் இம்மாதம் முதல் வாரத்திலும் வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி சென்னையில் வெயில் அடிப்பதால் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்தநிலையில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், குமரிக்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உருவாகிய மேலடுக்கு சுழற்சி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டிருந்தது. இது தற்போது லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளது. இந்தநிலையில் குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார் ரமணன்
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் வால்பாறையில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தளவாடி, தேவாலா, சின்னக்கலார் பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications