கொறடா பரிந்துரையால் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா?
கொறடா பரிந்துரையால் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கொறடா பரிந்துரையால் தற்போது தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கட்சிகளின் கொறடா உத்தரவு மிக முக்கியமானது. கட்சிகளின் கொறடா என்பவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் எம்.எல்.ஏக்கள் ஒரு தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்க முடியும்.
சட்டசபைக்குள் மட்டும்..
இந்த கொறடா உத்தரவு என்பது சட்டசபைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். சட்டசபை கூடாத நேரங்களில் வெளியிடங்களில் இந்த கொறடா உத்தரவு செல்லாது.
உடனே தகுதி நீக்கம் இல்லை
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொறடாவுக்கு அவர் சார்ந்த கட்சியின் பொதுச்செயலர்தான் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என உத்தரவிடுவார். ஆகையால் தற்போதைய நிலையில் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற 19 அதிமுக எம்.எல்.ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது.
|
முதல் கட்ட எச்சரிக்கை
அப்படி தகுதி நீக்கம் செய்தால் சட்டசபை கூடாத நேரத்தில் கொறடா உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என 19 பேரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது தினகரன் அணிக்கு தாவ நினைக்கும் எம்.எல்.ஏக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
விளக்கம் கேட்கலாம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் விஜயன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஆகியோரும் சட்டசபை கூடாத நேரத்தில் கொறடா உத்தரவு செல்லாது என்றே கூறியுள்ளனர். மேலும் கொறடாவின் பரிந்துரைப்படி 19 எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் மட்டுமே கேட்க முடியும் என்கிறார் சேடபட்டி முத்தையா.