திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் மீதான தீர்ப்பை மாற்றமாட்டேன்- சபாநாயகர் தனபால் உறுதி
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து திமுகவினரை வேறு வழியே இல்லாததால்தான் சஸ்பெண்ட் செய்ததாக சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே இல்லை என்று அவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
தமிழக சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, திமுகவினரை இடை நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெறுமாறு திமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு சட்டசபையில் இன்று மிகக் காட்டமாக விளக்கம் அளித்தார் தனபால். திமுகவினர் என்னைப் பற்றி அவைக்கு வெளியில் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வராமல் என்னைப் பற்றி பத்திரிகைகளில் அவதூறான கருத்துக்களை எழுதுகிறார்.
ஆனால், என்னைப் பற்றி எவ்வளவு தான் நீங்கள் பேசினாலும் பொருட்படுத்தப் போவதில்லை. நான் வேறு வழியே இல்லாமல் தான் திமுகவினரை சஸ்பெண்ட் செய்தேன்.
அவையில் ஒவ்வொரு நாளும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மாற்றிக் கொள்ளுமாறு, திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கையும் விடுத்தேன். தினம் தினம் அவையில் வந்து என்னை நோகடித்த காரணத்தினாலேயே அவர்களை அவை நடவடிக்கையில் இருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டேன்.
சட்டப்பேரவை விதிகளின் படி பேரவையை ஒழுங்காக நடத்துவேன். எனவே அவர்களை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமே இல்லை என்று அவைத் தலைவர் தனபால் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
3வது நாளாக எதிர்கட்சியினர் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்துள்ளார். தங்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததைக் கண்டித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications