துபாயில் வேலை செய்கையில் பார்வை பாதிக்கப்பட்ட தமிழர் சென்னை ஏர்போர்ட் போலீசில் புகார்
சென்னை: துபாயில் வேலை பார்க்கையில் ஏற்பட்ட விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நாடு திரும்பியுள்ள தமிழக வாலிபரின் மனைவி சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பிரபு கணேசன் நீச்சல் குளத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு சென்றார்.

9 மாதங்களுக்கு முன் அங்கு நீச்சல் குளத்தில் ரசாயன மருந்து தெளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் சற்று உடல்நிலை சரியானதும் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக துபாயில் இருந்து தகவல் வந்தது.
கடந்த 16ம் தேதி துபாயில் இருந்த திருச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் எனது கணவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் துபாயில் வழங்கப்படவில்லை. இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications