100% ஓட்டு... தேர்தல் கமிஷனுக்காக களமிறங்கிய சூர்யா
சென்னை: வாட்ஸ் அப்... ஃபேஸ்புக் என்று எந்த நேரமும் பொழுது போக்கும் இளைய தலைமுறையினர் மத்தியில் வாக்களிப்பதன் அவசியத்தையும், வாக்காளர்பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்க்க வேண்டியும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார் நடிகர் சூர்யா.
சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுக்காக நடிகர், நடிகையர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் போகின்றனர். அதற்கு முன்னதாக வாக்காளர்கள் கவரும் வகையில் நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த பிரசார வாகனம் காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கினை மையமாக கொண்டு தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
அதன் அடிப்படையில் சென்னை வேப்பேரியில் உள்ள சாந்தி குருஜெயின் மகளிர் கல்லூரியில் கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 'ஓட் பார் ரைட்' என கல்லூரி மாணவிகள் கோலமிட்டு அசத்தினர்.
இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். மாணவிகள் அனைவரும் தங்களது வாக்குகளை அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

விழிப்புணர்வு பிரச்சாரம்
அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ பிரசார வாகனத்தை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் தொடங்கி வைத்தார். இந்த வீடியோ வாகனம் சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் சென்று வாக்காளர்கள் மத்தியில் ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கும்.

100 சதவிகித ஓட்டு
நேர்மையான ஓட்டுப்பதிவு, பணத்துக்காக ஓட்டை விற்க கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்து எல்.இ.டி. வீடியோ படக்காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சூர்யாவின் பிரச்சாரம்
தேர்தல் வீடியோ படக்காட்சியில் நடிகர் சூர்யா, கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த பிரசார வாகனம் காலை முதல் இரவு வரை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

மக்கள் கூடும் இடங்கள்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சந்திரமோகன், தேர்தல் விழிப்புணர்வு வீடியோ பிரசார வாகனம் பொதுமக்கள் கூடக்கூடிய மார்க்கெட், வணிக வளாகம், பூங்கா போன்ற பகுதிகளுக்கு தினமும் சென்று அங்கு வீடியோ படம் ஒளிபரப்பப்படும்.
ஓட்டுப்போட்டால் பிரிண்ட்
ஒரு தொகுதிக்கு 4 மாதிரி வாக்கு சாவடிகளும், ஒரு மகளிர் வாக்கு சாவடியும் அமைக்கப்படும். இதனை அமைக்க இடங்களை தேர்வு செய்து வருகிறோம்.
யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு அண்ணாநகர் தொகுதியில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் பணிகள் தொய்வு இல்லாமல் நடந்து கொண்டு இருப்பதாகவும் சந்திரமோகன் கூறினார்.












Click it and Unblock the Notifications