தேர்தல் நேரத்தில் கடும் மின் தட்டுப்பாடு.. மக்கள் கடுப்பு: சமாளிக்க தனியாரிடம் மின்சாரம் வாங்கும் அர
நெல்லை: தமிழகத்தில் மின் பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் நிலவி வரும் மிகக் கடுமையான மின் வெட்டை சமாளிக்க தமிழக மின் வாரியம் தனியாரிடம் இருந்து அதிக அளவில் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்சனையாக மாறி வருகிறது. கடும் கோடை காரணமாக நீர் மின் நிலையங்களில் நீர் இல்லாததால் அங்கு புனல் மின்சாரம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியும் கைகொடுக்கவில்லை. தமிழகத்தில் தற்போதைய மின் தேவை 12799 மெகா வாட்டாக உள்ளது. பற்றாக்குறை 2500 மெகா வாட் வரை உள்ளது. இதை பல்வேறு வழிகளில் மின் வாரியத்தினர் சமாளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக குடியிருப்புகளுக்கு அதிக நேரம் மின்வெட்டு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
நீண்ட நேரம் மின்வெட்டு செய்வதால் ஏற்படும் அதிருப்தியை தவிர்க்க சில இடங்களில் 5 நிமிடம் வரை மட்டுமே மின்தடை செய்யப்படுகிறது. இதற்காக தொழிற்சாலைகளுக்கு 2 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. அந்த மின்சாரம் வீடுகளுக்குத் திருப்பி விடப்படுகிறது. இது தேர்தல் முடிந்தவுடன் நின்றுவிடும் என்கின்றனர் மக்கள்.
மின் உற்பத்தி சரிந்து வரும் நிலையில் கடந்த மாதம் வெளி இடங்களில் இருந்து 300 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. இது கடந்த வாரம் 830 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தற்போது 1093 மெகாவாட்டாக வெளி இடங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
காலை நிலவரப்படி 12800 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்ட நிலையில் 11370 மெகாவாட் அளவிலேயே மின்சாரம் கிடைத்து வருகிறது. தேர்தல் அன்று அதிகாலை முதல் இரவு வரை தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்பதால் அன்றும் கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications