கரூர் டி.என்.பி.எல். ஆலை கழிவுநீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி
கரூர்: கரூர் டி.என்.பி.எல். ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய பேப்பர் தயாரிக்கும் ஆலையாக கரூர் அருகே உள்ள காகிதபுரத்தில் இருக்கும் டி.என்.பி.எல். தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையை முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை நல்ல லாபத்தில் இயங்கி வரும் அரசு நிறுவனத்தில் முதன்மையாக விளங்கி வருகின்றது.
ஜான், சுரேஷ், அந்தோனி ஆகிய மூன்று பேர் இந்த காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். நேற்று, கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏற்பட்ட குழாய் அடைப்பை ஜான் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தொட்டியின் மேல் பகுதியில் இருந்து கழிவு நீருக்குள் தவறி விழுந்துவிட்டார்.
உடனே அருகில் இருந்து சுரேஷ், அந்தோனி ஆகியோர் ஜானை கழிவு நீருக்குள் இறங்கி வெளியில் மீட்டனர். இதில் ஜானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் சுரேஷ், அந்தோனி ஆகிய இரண்டு பேருக்கும், கை, கால்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட போது ஜான் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications