குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்.14 வரை கால அவகாசம் நீட்டிப்பு - தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை: குரூப் 4 தேர்வுக்கு வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பதவிகளில் பணியாற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆள் எடுத்து வருகிறது. தற்சமயம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5,451 காலிப் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (8-ம் தேதி) கடைசி நாள் ஆகும். ஆனால் கடந்த இருதினங்களாக டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கு வரும் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4.ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 09.08.2016 அன்று வெளியிட்டது.
இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 09.08.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.09.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது வேறு பிரச்சினைகளோ எழ வாய்ப்புள்ளது என்று இணையவழியே விண்ணப்பிப்பது எப்படி (How to Apply) என்ற அறிவுரைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையிலும், கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து வருகின்ற காரணத்தினாலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த 16.09.2016 வரையும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. ஆகையால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.