2017ஆம் ஆண்டு குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
2017 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2017ம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2017ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் வருடாந்திர கால அட்டவணை - 2017 என குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தால் வெளியிடப்படும் இத் தேர்வுக் கால அட்டவணை என்பது எந்தெந்த பதவிகளுக்கான தேர்வுகள், நடப்பு ஆண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதை தேர்வாணையத்தின் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும், ஒரு தோராயமான பட்டியல் ஆகும்.
இந்தப்பட்டியலில் 3781 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 28 பணிகள் / பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பட்டியலிடப்பட்ட பணிகள் / பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்படமுடியாமல் போகும் தருணங்களில் அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும்.
தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் / பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிட வாய்ப்புள்ளது.இக் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேவைப்படும் இனங்களில் அரசின் பணியாளர் குழு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.
இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படும். தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.