விஏஓ தேர்விற்கான ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் ஆணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலகர் தேர்விற்கான ஹால்டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுபற்றி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை வருகிற 14 ஆம் தேதி முற்பகல் நடத்த உள்ளது.
இத்தேர்வுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட ஹால்டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப்பட்டியலில் கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நிராகரிப்புப்பட்டியலில் இடம் பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டில் "விண்ணப்பதாரரின் பெயர், கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்ப பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக் கட்டணம். கட்டணம் செலுத்தியதற்கான அஞ்சலகம், இந்தியன் வங்கி கிளையின் முகவரி" நகலுடன் தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான [email protected] க்கு, வருகிற 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஹால் டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்து கொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.