ராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இவ்விவகாரத்தில் மனமுடைந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷான் கிரிவால் (வயது 70) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளிப்பதற்காக நேற்று முன்தினம் ராகுல் காந்தி சென்றார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.