கன்னியாகுமரியில் திடீர் கடல் சீற்றம்.. ராட்சத அலைகளால் பீதியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
கன்னியாகுமரி: சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பீதி அடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கடையால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ராஜாக்கமங்கலம் துறையில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுகிறது. இங்குள்ள சின்ன குருசடி பகுதியில் கடலில் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்கிறது.
நேற்று பகலில் தொடங்கிய கடல் சீற்றம் மாலை வரை நீடித்த நிலையில் கன்னியாகுமரியிலும் இன்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடலில் குளித்துகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்தைக் கண்டு பீதி அடைந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீசார் கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை எச்சரித்தனர்.
முக்கடல் சங்கமம் ஆகும் கடல் பகுதியில் கடல் சீற்றத்தால் காணப்பட்டதால் கோடை விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.