இன்ஜினியரிங் கலந்தாய்வு.. ஆன்லைன் பதிவுக்கு இன்றே கடைசி நாள்!
இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும்.
சென்னை: இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்துகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது.

இன்று வரை நீட்டிப்பு
ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று மாலை வரை இணையதளம் மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,000க்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

அசல் சான்றிதழ்கள்
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள, இணைய சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

ரேங்க் லிஸ்ட்
சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண் வெளியிடப்படும். மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களின் விருப்பகல்லூரி பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிரத்யேக இணையதளம்
அதைத்தொடர்ந்து ஜூலை 30ம் தேதிக்குள், 6 கட்டங்களாக இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் (tnea.ac.in) வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications