மது, சைடிஷ் சரியில்லையா?: கவலையை விடுங்கள்: கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் கொடுங்கள்
மது, சைடிஷ் சரியில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் கொடுக்கலாம்.
Recommended Video
சென்னை: மது, சைடிஷ், பார்கள் தொடர்பான புகார்களை அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகில் பல இடங்களில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருவதாகவும், அதன்மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 2500 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர். அப்போது, டாஸ்மாக் கடைகளின் அருகே சில்லறை கடைகள் வைத்து மது விற்பனை நடப்பது குறித்த புகாரின்பேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ஏராளமான இடங்களில் டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது. இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களில் மது அருந்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடையில் வாங்கப்படும் மதுபானங்களை மட்டுமே பார்களில் வைத்து அருந்த வேண்டும். அங்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. வெளியிலிருந்து கொண்டு வரப்படும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை பார்களில் அனுமதிக்கக்கூடாது.
பார்களில் விற்கப்படும் தின்பண்டங்களில் தரம் மற்றும் விலை பற்றியோ மற்றும் மது தொடர்பாக வேறு ஏதாவது புகார் இருந்தாலோ டாஸ்மாக் நிறுவனத்தின் இலவச கட்டணம் இல்லாத தொலைபேசி எண் 1800425 2015 மூலம் தொடர்பு கொள்ளலாம்.