மக்களின் வாழ்க்கையில் சங்கு ஊத வரும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு...!
சென்னை: தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் 15 சதவீத கட்டண உயர்வைக் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் வாகனங்களை வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கூடுதல் செலவாகும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில் மக்களின் அடி வயிற்றில் கை வைத்துள்ளனர் இந்த கட்டண உயர்வின் மூலம்.
ஒட்டுமொத்தமாக பல்வேறு விலை, கட்டண உயர்வுக்கு இந்த சுங்கச் சாவடி கட்டண உயர்வு வழி வகுக்கப் போகிறது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.

அராஜக உயர்வு
இதுவரை இருந்து வந்த கட்டணத்தை விட அதிக அளவில் கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு கார்கள், வேன்கள், லாரிகள், பஸ்கள் தள்ளப்பட்டுள்ளன.

கை நிறைய பணத்துடன் காரை எடுங்கப்பா
இந்தக் கட்டண உயர்வின் காரணமாக, சென்னையிலிருந்து தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரி வரை செல்ல நினைப்போர், காருடன், கை நிறைய பணத்தையும் எடுத்துச் செல்ல நேரிடும். குறைந்தது ரூ. 2000 வரைக்கும் சுங்கச் சாவடிகளில் கொட்டி அழ நேரிடும்.

லாரி, பஸ்குக்கு தனி ரேட்
இது காருக்குத்தான். இதுவே வேன், லாரி, பஸ்கள் என்றால் இந்தக் கட்டணம் பல மடங்காக எகிறிக் காணப்படும்.

சரக்கு லாரிகளுக்கு கஷ்டம்
இந்தக் கட்டண உயர்வால் கடும் பாதிப்பை சந்திக்கப் போவது சரக்கு லாரிகள்தான். அதாவது அரிசி, பருப்பு, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், லாரிகள்தான் மிகப் பெரிய செலவீனத்தை சந்திக்கவுள்ளன.

விலை உயரும்
சுங்கச் சாவடி கட்டண உயர்வைக் காரணம் காட்டி வேன், லாரி வாடகை கிடுகிடுவென அதிகரிக்கும் அப்படி அதிகரிக்கும் கட்டணச் சுமை கடைசியில் பொருட்களின் விலை உயர்வு மூலமாக மக்களின் தலையில்தான் வந்து விடியப் போகிறது.

கட்டுமானப் பொருட்களும் விலை உயரும்
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்களுக்கு சுங்கக் கட்டணங்களில் ஏற்படும் இந்த விலைவாசி உயர்வு கடுமையான சுமையை ஏற்படுத்தும். கனரக வாகனங்களில் கொண்டு வரப்படும் சிமெண்ட், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையும் உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

41 சுங்கச் சாவடிகள்
தமிழகத்தில் உள்ள 41 சுங்கச்சாவடிகளில் 20 சாவடிகளில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 21 சுங்கச் சாவடிகளிலும் தற்போது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சில சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் உரிமம் மத்திய அரசிடம் உள்ளது. பெரும்பாலான சுங்கச்சாவடிகள் தனியாரிடம்தான் உள்ளன.

மக்களுக்கு ஒரு லாபமும் இல்லை
இதன் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சாலைகளை முறையாக பரமாரிக்கவும், வாகன ஓட்டிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஆனால் இந்த வசதிகள் எல்லாம் ஒரு கண்துடைப்பு பேரிலே செய்து கொடுக்கப்படுவதாகவும், பொது மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

போராட்டங்கள் வெடிக்கும்
ஏற்கனவே சுங்கச் சாவடிக் கொள்ளைகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே அடிதடி ரகளைகள் நடந்து வருகின்றன. இனி அது அதிகரிக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications