கையை கடிக்கும் காய்கறிகள்... தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை: இல்லத்தரசிகள் கவலை
சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர்மழையால் தமிழகம் முழுவதும் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. காரட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலைகள் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக காய்கறி கடைக்கு சென்று விலை கேட்டவர்களுக்கு மயக்கம் வராத குறைதான். எது எடுத்தாலும் தாறு மாறு விலைதான். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ பத்து ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 10 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி 1000 ரூபாய் என்று தெரிவித்தனர் சில்லறை கடைக்காரர்கள். வாடிக்கையாளர்களை தக்க வைக்க வேண்டும் என்று வாங்கிய விலைக்கே தருவதாக கூறினர்.

சின்ன வெங்காயம் கிலோ 50 ரூபாய்க்கும் பல்லாரி கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பீன்ஸ், காரட் விலை கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் விலை கிலோ ரூ.40க்கும் விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், 1 கிலோ பச்சை மிளகாய், 50 - 70 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும், சராசரியாக இதே விலையே உள்ளது.
இந்தாண்டு கோடை காலம் கடுமையாக இருந்ததால், பாசன பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் காய்கறி பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை காலம் முடிவுக்கு வந்து விட்டாலும், பல மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் காய்கறி வரத்து குறைவாகவே உள்ளது. இதனால், காய்கறிகளின் விலை, சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் காய்கறி விலை உயர்வு, நடுத்தர, ஏழை மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. பொள்ளாச்சியில் கடந்த மார்ச் மாதம், கிலோ 5 ரூபாய்க்கு விற்ற தக்காளி, நேற்று 70 ரூபாய்க்கும், 25 ரூபாய்க்கு விற்ற அவரைக்காய், 100 ரூபாய்க்கும் விற்று மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதே போல், ஒரு கிலோ பீன்ஸ் 80, பீட்ரூட், 50, வெள்ளை முள்ளங்கி 35, முட்டைக்கோஸ் 35, காரட் 55, வெண்டைக்காய் 45, உருளைக்கிழங்கு 32, கத்தரிக்காய் 36, பச்சை மிளகாய் 50, பாகற்காய் 48, காலிபிளவர் 60 , முருங்கைக்காய், 40 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது.
'கோடை வெயிலால் பாதிக்கப்பட்ட பயிர்களை நீக்கி விட்டு, புதிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அவை இன்னும் விளைச்சலுக்கு வரவில்லை. இன்னும் சில வாரங்களில் அவை விளைந்து, காய்கறி வரத்து நிச்சயம் அதிகரிக்கும். அதன் பின் விலையும் குறையும் என்கின்றனர் வியாபாரிகள்.












Click it and Unblock the Notifications