பாஜகவில் வெடிக்கப்போகும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் கைதாகும் டாப் புள்ளி! மோடி விசிட்டுக்கு பிறகு?
சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி தகவல்கள் கிளம்பி வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவின் மிக முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் வந்து சென்றபிறகு கைது நடவடிக்கை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆருத்ரா நிறுவனம், பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதாமாதம் 25 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து வாடிக்கையாளர்களிடம் பணம் பெற்று ரூ. 2,438 கோடி மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் பேச்சி முத்துராஜ், ரபீக், ஐயப்பன் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை ஆருத்ரா நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியது. முக்கிய இயக்குனர்களாக செயல்பட்டு வந்த ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். தொடர் விசாரணையில் காஞ்சிபுரத்தில் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி மையம் நடத்தி வரும் ரூசோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

பாஜக நிர்வாகி ஹரீஷ்
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனரும், பாஜகவில் விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக செயல்பட்டு வந்த ஹரீஷ் என்பவரையும், மற்றொரு இயக்குநரான மாலதி என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். ஹரீஷை காவலில் எடுத்து போலீசார்ர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாய் சென்று தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கில் சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.
வளையத்தில் ஆர்கே சுரேஷ்
ஆர்.கே.சுரேஷை தமிழ்நாட்டிற்கு அழைத்து, வர பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆர்.கே.சுரேஷ் யார் யாரிடம் இந்த பணத்தை கொடுத்து இருக்கிறார் என்ற கோணத்திலும், ரகசிய தகவல்களை போலீசார் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சிலர் சிக்குவார்கள் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆருத்ரா மோசடி வழக்கில் ஏற்கனேவே 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி ஹரிஷ் உள்ளிட்ட ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்கள் பல பிரமுகர்களை சந்தித்த, சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி காவல்துறையினர் பல ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது.
சிக்கும் பாஜகவின் டாப் புள்ளி
இந்நிலையில், பாஜகவின் முக்கிய புள்ளி ஒருவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பாஜக விளையாட்டு பிரிவின் மாநில நிர்வாகி ஹரீஷ் மற்றும் ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் சில பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8,9 ஆகிய நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டுத் திரும்பிய பிறகு, பாஜகவின் முக்கிய 'புள்ளி' ஒருவர் உட்பட மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications