கடைகள் இல்லை.. பஸ் இல்லை.. சாலைகள் வெறிச்சோடின.. புலம்பலும் இல்லை!
கருணாநிதியின் மறைவையொட்டி, தமிழகத்தில் நேற்று பஸ்கள் இயங்கவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முழு பந்த் போல காட்சியளித்தாலும் மக்களிடமும் புலம்பல் இல்லை.
சென்னை: ஓய்வறியா மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி நிரந்தர ஓய்வெடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன, பஸ் வசதி இல்லை, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. ஆனால், மக்களிடையே எந்த புலம்பலும் இல்லை. தமிழினத் தலைவருக்கு ஒவ்வொரு தமிழனும் மனதளவில் மவுனமாக அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலையிலேயே டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன,

இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று காலை முதல் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட, நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதியின் உடலை கடைசி முறையாக பார்ப்பதற்காக தொண்டர்களும், பொதுமக்களும் முண்டியடித்து ராஜாஜி ஹாலுக்கு வந்தனர்.
கருணாநிதியின் மறைவால் அசம்பாவிதம் ஏதும் நடக்கக் கூடாது என, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறித்தப்பட்டது. டாக்சி, ஆட்டோ போன்றவையும் இயக்கப்படவில்லை.
கிட்டத்தட்ட பந்த் போன்ற ஒரு காட்சி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தது. ஆனாலும், தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் ஒரு சின்ன சம்பவம் கூட நடக்கவில்லை. கட்சித் தொண்டர்கள், கருணாநிதியின் அபிமானிகளின் கண்ணீரைத் தவிர, வேறு எந்த சத்தமும் தமிழகத்தில் இன்று கேட்கவில்லை.
எந்தப் பகுதியில் இருந்தும் மக்கள் பாதிக்கப்பட்டதாக எந்த ஒரு சிறு சலசலப்போ, புலம்பலோ இல்லை. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருக்கு தமிழகம் கிட்டத்தட்ட மவுனமாக அஞ்சலி செலுத்தியது.












Click it and Unblock the Notifications