கொல்லிமலைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
நாமக்கல்: கொல்லிமலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் கொல்லிமலை ஆகும். இம்மலையில் ஏராளமான அபூர்வ மூலிகை செடிகள் உள்ளது. இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோவில், மாசில்லா அருவி, நம்ம அருவியும் அமைந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் மட்டும் இன்றி பொதுவாக எப்போதும் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்த வண்ணம் இருப்பர்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடைமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கொடைக்கானல், குற்றாலம், கொல்லிமலை போன்ற இடங்களில் உள்ள அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டி வருகின்றது.
தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர்.
கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் வழக்கத்தை காட்டிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழந்து வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்து பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கொல்லிமலை களைகட்டி உள்ளது.