தமிழக கடையடைப்பு போராட்டம்.. சென்னையில் திறப்பு.. கோவையில் மூடல்
சென்னை: காமன்வெல்த் மாநாட்டை கண்டித்தும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை அறிவித்துள்ள கடையடைப்புப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இதில் சென்னையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம், கோவை பகுதியில் பெரும்பாலான கடைகள், தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்தில் விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பங்கேற்கவில்லை.

சென்னையில்
சென்னையில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்ததைக் காண முடிந்தது. வழக்கம் போல மளிகைக் கடைகள், டீக்கடைகள், பேக்கரி உள்ளிட்ட கடைகள் திறந்திருந்தன.
காய்கறி, பழம் ஆகியவை அழுகும் பொருள் என்பதால் திடீரென கடைகளை அடைக்க முடியாது. வெளியூர்களில் இருந்து காய்கறி லோடு வந்து கொண்டிருப்பதால் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்வோம். காலை 11 மணியில் இருந்து 1 மணி வரை 14 ஆம் நம்பர் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசகர் சவுந்தர்ராஜன் அறிவித்திருந்தார். அதன்படி அங்கும் கடைகள் திறந்திருந்தன.
இதேபோல், தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு, மயிலாப்பூர், புரசைவாக்கம், அயனாவரம், வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், அடையார், திருவான்மியூர், குன்றத்தூர், பல்லாவரம், அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி வியாபாரிகளும் கடையடைப்பில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். அங்கும் கடைகள் பெரும்பாலும் மூடப்படவில்லை.
கோவையில் கடைகள் மூடல்
அதேசமயம், கோவையைச் சேர்ந்த தொழில் அமைப்புகள் போரட்டத்தில் பங்கேற்றுள்ளன. முழு அடைப்பு போராட்டத்தையொட்டி கோவையில் டேக்ட், டாப்மா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பதினைந்தாயிரம் தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
புதுவையில்
புதுச்சேரியில் 15,000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் ரயில் மறியல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட மதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறியல் காரணமாக சென்னை-கோவை இன்டெர்சிட்டி மற்றும் பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயில் ஆகியவை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications