ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா?.. ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது வணிகர்கள் பாய்ச்சல்
விழுப்புரம்: திருப்பூரில் பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்துகின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது திருப்பூரில் பெண்கள் மீது வெறித்தனமாக போலீஸார் நடத்திய தடியடி, ஏடிஎஸ்பி பாண்டியராஜன் என்பவர் பெண்ணின் கன்னத்தில் அறைந்தது உள்ளிட்ட சம்பவத்தை கடுமையாக கண்டித்தார்.

அவர் பேசுகையில், திருப்பூரில் காவல் துறை அதிகாரி பெண்களை தாக்கியது ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமோ என ஐயப்பட வைக்கிறது.
திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் பெண்களை தாக்கிய காவல் துறை அதிகாரியின் செயல் கண்டிக்கதக்கது. யாரை தாக்க வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு போராடுகிறவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதை விடுத்து அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து பிரதமர் பேச வேண்டும். டெல்லியில் கடந்த 30 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். வணிகர்களை வஞ்சிப்பதை போலவே மத்திய அரசு விவசாயிகளையும் வஞ்சிக்கிறது. பிரதமர் விவசாயிகளை அழைத்து பேசி அரசால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விவசாயிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications