ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமா? டிராபிக் ராமசாமி வழக்கு நாளை ஹைகோர்ட்டில் விசாரணை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடைகோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடைகோரி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். முறையீட்டை வழக்காக தொடர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆர்.கே. நகரில் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளாக பிரிந்து போட்டியிடுகிறது. அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஓபிஎஸ் அணி வேட்பாளராக மதுசூதனன், இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

62 வாக்காளர்கள்
திமுகவின் மருதுகணேன், தேமுதிகவின் மதிவாணன், பாஜகவின் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன் ஆகியோர் இடைத்தேர்தல் களத்தில் சுயேச்சைகளுடன் மொத்தம் 62 பேர் உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 தினங்களே உள்ளதால் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.

பணம் விநியோகம்
ஆர். கே. நகரில் பண வெள்ளம் பாய்கிறது. தேர்தல் ஆணையம் கண்காணித்தாலும் டோக்கன்கள், பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு கை மாறுகிறது. எனவே ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

டிராபிக் ராமசாமி வழக்கு
இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அதில் அவர் வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவது அதிகம் காணப்படுகிறது.

தடை விதிக்க வேண்டும்
ஆர்.கே. நகரில் தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறும் வாய்ப்புகள் குறைவு என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கோரியுள்ளார். இந்த முறையீட்டை வழக்காக மாற்றி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒத்துக்கொண்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தடை வருமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உயர்நீதிமன்றம் டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரித்து இடைட்தேர்தலுக்கு தடை விதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications