போயஸ் கார்டன் அருகே வைக்கப்பட்டிருந்த 'அம்மா' பேனர்களை கிழித்தெறிந்த டிராபிக் ராமசாமி
சென்னை: சென்னை போயஸ் கார்டன் அருகே விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேனர்களை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கிழித்தெறிந்தார்.
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு அருகே உள்ளது கதீட்ரல் சாலை. அந்த சாலையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ள பிரமாண்ட பேனர்களை வைத்திருந்தனர். புதன்கிழமை காலை கதீட்ரல் சாலை வழியாக சென்ற சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அந்த பேனர்களை தனது கையாலேயே கிழித்து எறிந்தார்.
ஜெயலலிதாவின் பேனர்களை டிராபிக் ராமசாமி கிழித்துக் கொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
இது குறித்து ராமசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்த பேனர்கள் விதிகளை மீறி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை அகற்றக் கூறியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கின்றார்கள். இது குறித்து நான் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.