ஒரே கிராமத்தில் 19 பேர் பலி.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் நெஞ்சை உறைய வைக்கும் சோகம்
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. விருதுநகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று வேலைக்குச் சென்றதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
குடும்பத்தினரை இழந்த உறவினர்கள் கண்ணீருடன் கூறுகையில், '10 பேர் பாக்குற இடத்துல 20 பேர் வேலை பார்த்தது தான் இதற்கு முக்கிய காரணம். சரியான விதிமுறைகளை பாலோ பண்ணாததால் இப்படி ஆகிவிட்டது" என்று கூறினர்.

உடல் கருகி பலி
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே முத்துமாணிக்கம் என்பவரது பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்கள், ஆண்கள் என 25 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு செயல்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாட்டையே உலுக்கிய இந்த விபத்து குறித்து 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம், அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளருடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே கிராமத்தை சேர்ந்த 19 பேர் உயிரிழப்பு
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 18 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 19 பேர் உயிரிழந்தது தற்போது தெரியவந்துள்ளது. விருதுநகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் நேற்று வேலைக்குச் சென்றுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று வேலைக்கு போவோம் என சென்றிருக்கிறார்கள்.
ஒரு அறையில் 4 பேர் இருக்க வேண்டும் என்றால் இங்கு 10 பேர் இருந்துள்ளனர். மேலும் ஒவ்வொரு அறையும் தனித்தனியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே பக்கத்து பக்கத்திலேயே இருந்தது. தூரம் தூரமாக இருந்திருந்தால் இவ்வளவு உயிர்கள் போயிருக்காது. 19 பேரை பறிகொடுத்த சேர்வைக்காரன்பட்டி கிராம மக்கள் கண்ணீருடன் கூறுகையில், "10 பேர் பாக்குற இடத்துல 20 பேர் வேலை பார்த்தது தான் இதற்கு முக்கிய காரணம். சரியான விதிமுறைகளை பாலோ பண்ணாததால் இப்படி ஆகிவிட்டது. அதிகாரிகள் அவ்வபோது வந்து ஆய்வு செய்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. வெடிபொருட்களும் அதிகமாக இருந்துள்ளது" என்று கூறினர்.
அதிக வெடிபொருட்கள் இருந்ததே
மேலும், அதிக வெடி பொருட்கள் மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக கலந்ததால் தான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வழங்காததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே விருதுநகர் அருகே பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது நீதிபதி, "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை?.. நிவாரணம் அளிப்பது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.














Click it and Unblock the Notifications