வகுப்பறையில் தோழி மீது சரிந்த மாணவி.. துடிதுடித்து பலி! ராணிப்பேட்டையில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்
ராணிப்பேட்டை: வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தி வந்த நிலையில், அதைக் கவனித்துக் கொண்டு இருந்த 9ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து நொடிகளில் உயிரிழந்த ஷாக் சம்பவம் ராணிப்பேட்டையில் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. நல்ல உடல்நிலையில் இருப்போர் கூட திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு ஆகியவை காரணமாகவே பெரும்பாலும் இந்த மரணங்கள் ஏற்படுகிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது ராணிப்பேட்டையில் நடந்துள்ளது.
உயிரிழப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை அடுத்துள்ள பெல்லியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த தோல் மருத்துவர் வசந்தகுமார். இவரது மகள் ஈஷா அத்விதா, அங்குச் சுமைதாங்கி பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை ஈஷா அத்விதா வழக்கம் போலப் பள்ளிக்குச் சென்று இருக்கிறார். அப்போது வகுப்பறையிலேயே திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வகுப்பில் ஆசிரியை பாடம் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், மாணவி அத்விதா அதைக் கவனித்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாணவி அத்விதா மயங்கி அருகே இருந்த மாணவி மீது சாய்ந்தார். அருகில் இருந்த அந்த மாணவிக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
உயிரிழப்பு: இதையடுத்து அந்த மாணவி உடனடியாக ஆசிரியையைக் கூப்பிட்டுள்ளார். மாணவிக்குப் பள்ளியிலேயே முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
பிரேதப் பரிசோதனை: இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவேரிப்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரித்தனர். மேலும், சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆசிரியை பாடம் நடத்தும் போது மாணவி திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் பதைபதைக்க வைப்பதாக இருக்கிறது.

இந்த சிறுமி எதனால் உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக மாணவி உயிரிழந்து இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வெளியானால் தான் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இளைஞர்களிடையே அதிகரிக்கும் மாரடைப்பு: அதேநேரம் இந்தியாவில் இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்புக்குப் பிறகு இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில் தீவிர கொரோனா பாதிப்பு இருப்போருக்கு மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டோர் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தீவிரமாக எந்தவொரு வேலையையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தலையும் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications