ஓட்டு எண்ணும் அதிகாரிகளுக்கு மே 5 முதல் பயிற்சி...: பிரவீன்குமார் அறிவிப்பு
சென்னை: ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணி மே 5-ந் தேதியில் தொடங்குவதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அறிவித்துள்ளார். மேலும், இம்முறை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் சிறிது தாமதம் ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரவீன்குமார் கூறியிருப்பதாவது :-
பயிற்சி வகுப்புகள் :
வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மே 5-ந் தேதி சென்னையிலும், 6-ந் தேதி கோவையிலும், 7-ந் தேதி மதுரை மற்றும் திருச்சியிலும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.
பயிற்சி நடக்கும் இடங்களில், அதைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சட்டமன்ற தொகுதிக்கான தலைமை தேர்தல் அதிகாரிகள், ஓட்டு எண்ணிக்கைக்கான ஒருங்கிணைப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
அதன்படி ஒரு பயிற்சி மையத்தில் 60 அலுவலர்கள் பங்கேற்பார்கள். அந்த வகையில் 4 மையங்களிலும் 240 அலுவலர்கள் பயிற்சி பெறுவார்கள். அரை நாள் இந்த பயிற்சி நடைபெறும்.
தேர்தல் முடிவுகள் :
பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒலி பெருக்கி மூலம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அதோடு, கரும்பலகைகள், மிகப்பெரிய டிஜிட்டல் பலகைகள், இணையதளம் ஆகியவற்றிலும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் தரப்படும்.
தாமதம் ஏற்படலாம் :
மே 16-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் அரைமணி நேரம் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். வேட்பாளர்கள் அதிகமாக இருப்பதால், ஓட்டு எண்ணிக்கை முடிவுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். ஓட்டு எண்ணிக்கை தினத்தன்று முழுமையாக டாஸ்மாக் மதுக்கடைகள் பூட்டப்பட்டு இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.