அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக்... ரயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள்
அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக புறநகரில் இருந்து சென்னைக்கு வேலைக்கு வந்தவர்கள் பாடு படு திண்டாட்டமாகியுள்ளது.
சென்னை: அரசு பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் சென்னைக்கு பணிக்கு வருபவர்களை அவதிக்கு ஆளாக்கியுள்ளது. திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், காஞ்சிபுரம், தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்பவர்கள் ரயில்நிலையங்களில் குவிந்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. வெளியூர்களில் இருந்து ரயிலில் வந்தவர்கள் வீடு திரும்ப ஆட்டோ, கால்டாக்ஸிகளில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பஸ் ஸ்டிரைக்
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ரூ. 4500 கோடி
போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை அரசு ஈடுசெய்ய வேண்டும். தொழிலாளர்களது பணம் சுமார் ரூ.4500 கோடியை போக்குவரத்து கழகங்கள் தவறாகக் கையாண்டு செலவு செய்துவிட்டன இதை தொழிலாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டும்.

13வது ஊதிய ஒப்பந்தம்
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 13ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்கிட வேண்டும்.
ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட 12 ஊதிய ஒப்பந்தங்களில் ஒப்புக்கொண்டு நிறைவேற்றப்படாத ஒப்பந்த பிரிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நிலுவை தொகை
ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஓய்வுக்கால பலன்கள் சுமார் ரூ.1700 கோடி நிலுவையை வழங்க வேண்டும் - மாதந்தோறும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குவதற்கு .ரூ.100 கோடி வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களை நடைமுறையிலுள்ள போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பதற்கான உறுதி வழங்க வேண்டும்.

ஊழியர்களின் ஊதியம்
அரசு மற்றும் மாநில பொதுத்துறை ஊழியர்களைவிட போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது - இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அலைமோதும் கூட்டம்
இதனால் பெரும்பாலான பகுதிகளில் அரசு பேருந்து இயக்கம் தடைப்பட்டுள்ளது. சுமார் 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழக்கத்துக்கு அதிகமாக பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், பென்னேரி, கும்மிடிபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பேருந்துகள் இல்லாமல் ரயில் மூலம் சென்ட்ரல் வந்துள்ளனர்.

ஊர் திரும்புவது எப்படி?
இதேபோல புறநகர் பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னை வந்தவர்கள், காஞ்சிபுரம், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் எழும்பூர் ரயில்நிலையம், கடற்கரை ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.

வெளியூர்வாசிகள்
வெளியூர்களில் இருந்து சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் வந்த பொதுமக்கள் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

அதிக கட்டணம்
பயணிகள் வேறு வழியின்றி கால் டாக்ஸி, ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து அவர்களுக்கு உதவி செய்யாமல் ஆட்டோ, கால்டாக்ஸி நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டதுதான் சோகம். குறைந்த அளவு பணமே கொண்டு வந்ததாகவும் திடீரென அதிக அளவு பணம் கேட்டால் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் தவிப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.

போக்குவரத்து நெரிசல்
வெளியூரில் இருந்து சென்னை வந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையங்களை நாடினர். இதனால் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல் திணறடித்தது. ஊருக்கு போக முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பலரும் கவலையுடன் கூறினர். இந்த வேலை நிறுத்தம் இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்குமோ என்ற கவலையுடன் பலரும் புலம்பியவாறே சென்றதை கேட்க முடிந்தது.












Click it and Unblock the Notifications