அடிக்கடி ஏற்படும் மின்பழுது...அதிகாரிகள் அலட்சியம் - முறிந்து விழுந்த மின்கம்பத்தால் 2 பேர் படுகாயம்
கோவை: கோவையில் மின்சார கம்பம் முறிந்து விழுந்ததால் மின்பழுதினை சரி செய்ய வந்த ஊழியரும், மூதாட்டி ஒருவரும் காயமடைந்தனர்.
கோவை வெள்ளக்கிணர் அம்பேத்கர் வீதியில் நேற்று மாலை மின்பழுது ஏற்பட்டது. இதையடுத்து அதை சரிசெய்ய அங்கு வந்த மின்வாரிய ஊழியர் அங்கமுத்து மின்கம்பத்தில் ஏறி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தின் அடிபாகம் முறிந்து அருகில் இருந்த பட்டியம்மாள் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இதில் மின்கம்பத்தில் இருந்த ஊழியர் அங்கமுத்துவிற்கு கையில் காயம் ஏற்பட்டது மேலும் வீட்டிற்குள் இருந்த பட்டியம்மாளுக்கும் சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டின் மேற்கூரையின் ஓடுகள் மீது கம்பம் விழுந்ததில் கூரை சேதமடைந்தது.
இத்தகவல் அறிந்ததும் மின் பொறியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக மாற்று நடவடிக்கையை மேற்கொண்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, அம்பேத்கர் வீதியில் பல மின்கம்பங்கள் இதே போல் மோசமான நிலையில் இருப்பதாகவும் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உடனடியாக பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்து கொடுக்கவும் வீட்டின் உரிமையாளருக்கு உரிய நிவாராணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இல்லாவிட்டால் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications