அரவாண் களப்பலியுடன் நிறைவு பெற்ற கூவாகம் விழா: தாலி அறுத்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் விழா களப்பலியுடன் இன்று நிறைவுபெற்றது.
விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டர் கோயில் விழா களப்பலி நிகழ்ச்சியுடன் இன்று நிறைவு பெற்றதையடுத்து திருநங்கைகள் விதவை கோலத்துடன் சொந்த ஊர் திரும்பி சென்றனர்.
கடந்த 17-ம் தேதி கூத்தாண்டவர் கோயிலில் தொடங்கிய சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அரவாணுக்கு தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்ட கோயில் பூசாரிகள் கைகளால் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனர். திருமணமான மகிழ்ச்சியை கும்மி அடித்தும், ஆடிப்பாடியும் விடிய விடிய கும்மியடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
இதில், அங்கிருந்த திருநங்கைகள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த காய்கனிகள், தானியங்களை தேர் மீது வீசி எறிந்து அரவாணை வழிபட்டனர்.
பின்னர், அரவாணை பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தங்களது கணவன் பலியிட அழைத்து செல்வதாக கூறி திருநங்கைகள் கதறி அழுதனர். அரவாணை களப்பலியிட்ட பிறகு கையில் அணிந்திருந்த வளையல்களை உடைத்தும், தாலிகளை அறுத்தும், நெற்றிப் பொட்டை அழித்தும் ஒப்பாரி வைத்தனர். பின்னர், அருகிலிருந்த கிணறுகளில் நீராடி வெள்ளை உடைகளை அணிந்து விதவைக் கோலம் பூண்டு தங்களது சொந்த ஊர் கிளம்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications