திருநங்கைகளை நடனமாடவைத்து வரிவசூலிப்பதா?: ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் கண்டனம்
சென்னை: சென்னையில் நட்சத்திர ஹோட்டல்கள் முன்பு சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருநங்கைகளை நடனமாட வைத்த சம்பவம் திருநங்கைகள் மத்தியில் மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், திமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் முன்பு வெள்ளிக்கிழமையன்று சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து நடனமாட வைத்துள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.

ஸ்டாலின் கண்டனம்
திருநங்கைகளை நடனமாட வைத்து சொத்து வரி வசூலித்த சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளை மனிதாபிமானமற்ற முறையில் சென்னை மாநகராட்சி ஈடுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், திமுக ஆட்சி காலத்தில் திருநங்கைகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து, அவர்களுக்கு சமூகத்தில் மதிப்பையும் மரியாதையையும் ஏற்படுத்தி கொடுத்தது.
ஆனால் சென்னை மாநகராட்சியின் இந்தச் செயல் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

கொச்சைப்படுத்துவதா?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது திருநங்கைகளை கொச்சைப் படுத்தும் செயல்; இது கடுமையான மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திருநங்கைகள் கண்டனம்
இது மிக மோசமான செயல் என்கிறார் திருநங்கையான பிரியா பாபு. சமூகத்தில் திருநங்கைகள் குறித்து இருக்கும் பிம்பத்தை மாநகராட்சி பயன்படுத்திக்கொள்கிறது என்கிறார் அவர்.
வரிவசூலுக்காக திருநங்கைகளை பயன்படுத்தியிருப்பது தவறான முன் உதாரணம்.மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியையும் அருவெறுப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்" என்கிறார் திருநங்கை ரோஸ்.

அதிகாரிகள் ஆடலாம்
அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைக்கு திருநங்கைகள் எதற்கு? அவர்களே அதை செய்துவிட்டு போகலாமே. வரியை வசூலிக்கும் அளவிற்கு அதிகாரிகள் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு ஆடித்தான் வரியை வசூலிக்க முடியும் என்றால் அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..?

நிரந்தர வேலை கொடுங்கள்
வெறுமனே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு திருநங்கைகளுக்கு நிரந்தர அரசு வேலை தரவேண்டும். எனவே மீண்டும் இது போன்று நிகழ்வுகள் நடக்க கூடாது. நடந்தால் திருநங்கைகள் பொறுமை காக்க மாட்டோம்" என்றும் திருநங்கைகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications