மதிமுக – பாஜக கூட்டணியில் பிரச்சினையில்லை: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: மதிமுகவுக்கும் எங்களுக்கும் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு கட்சிகளும் சந்திப்பதில் தான் பிரச்னை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அம்பேத்கரின் 58-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் படத்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அம்பேத்கர் நாட்டுக்காக செய்த பணிகளை மக்கள் நினைவுகூர்ந்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் அம்பேத்கர் நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் நான்கு வழிச்சாலைகளில் அம்பேத்கர் பெயரில் மரக்கன்று நடும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு பசுமை சாலை திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாம்பரத்தில் இப்பணி இன்று தொடங்கியுள்ளது. திருக்குறளையும், வள்ளுவரின் பிறந்தநாளையும் தேசிய அளவில் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு நன்றியை தெரித்து கொள்கிறேன்.
பாரதியார் பெயரில் ‘பெண்கள் முன்னேற்றம்‘ என்ற தலைப்பில் வருகிற 11ம் தேதி கவிதைப்போட்டி நாடு முழுவதும் நடத்தப்படும். இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 மீனவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதிமுகவுக்கும் எங்களுக்கும் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. இரண்டு கட்சிகளும் சந்திப்பதில் தான் பிரச்னை என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
வைகோ அஞ்சலி
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இராஜபாளையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஜி.கே.வாசன் அஞ்சலி
சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்கார் உருவப் படத்திற்கு பல்வேறு தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சென்னை துறைமுகத் தலைவர் மற்றும் துறைமுக பொறுப்புக் கழகத்தை சேர்ந்தவர்கள் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே. வாசன் , அவரது ஆதரவாளர்களோடு வந்து துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
முன்னதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள், அம்பேத்கருக்கு மரியாதை செய்தனர்.